சந்திர பகவான் விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்!!

நாம் வாழும் இந்த பூமியில் பகலில் வெளிச்சத்தையும், வெப்பத்தையும் தருபவராக சூரிய பகவான் இருக்கிறார். இரவு நேரங்களில் மாதத்தில் வரும் வளர்பிறை நாட்களிலும், பௌர்ணமி தினத்திலும் வெளிச்சத்தையும், குளுமையையும் தரும் கிரகமாக “சந்திர பகவான்” இருக்கிறார். நமது சாஸ்திரங்களில் சந்திர பகவான் ஒரு மனிதனின் மனநிலைக்கு காரகனாக “மனோகாரகன்” என்றழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட சந்திர பகவானுக்கு மேற்கொள்ளும் “சந்திர விரதம்” குறித்தும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம். சந்திர பகவானுக்கு விரதம் அனுஷ்டிப்பவர்கள் வளர்பிறை திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், அருகிலுள்ள கோயிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு மல்லிகை பூக்கள் சமர்ப்பித்து, அரிசி நிவேதனம் வைத்து, பசு நெய் தீபம் ஏற்றி சந்திர பகவானுக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபட்டு, பிறகு கோயிலின் இறைவனான சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியையும் வணங்க வேண்டும்.

சந்திர விரதம் மேற்கொள்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொள்வது சிறப்பு. அது முடியாத பட்சத்தில் மூன்று வேளையும் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பசும்பால் அருந்தலாம். நீங்கள் விரதம் மேற்கொள்வது பௌர்ணமி தினமாக இருக்கும் பட்சத்தில் மாலை அல்லது முன்னிரவு வேளையில் வீட்டிற்கு வெளியில் அல்லது மாடிக்கு சென்று இரவில் ஒளியை தரும் சந்திர தரிசனம் செய்து வணங்க வேண்டும்.சந்திர விரதம் வருடந்தோறும் வரும் பௌர்ணமி தினங்களில் மேற்கொள்பவர்களுக்கு சிறந்த மனநிலை, ஞாபகசக்தி உண்டாகும். கண்களில் நோய் அல்லது குறைபாடு ஏற்படாது. சித்தம் தெளிவு பெறும். ஆன்மீக ஞானம் பெருகும். பால்,அரிசி, மீன், உப்பு வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகுந்த லாபங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாடுகள் பயணம் செல்லும் யோகத்தையும் சந்திர விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு சந்திர பகவான் அருள்வார்.

Related Stories: