செங்கல்பட்டில் பசுமை தீபாவளி கொண்டாட மாணவிகளுக்கு விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பசுமை தீபாவளி கொண்டாட அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, பசுமை தீபாவளி கொண்டாட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு, மனித உரிமைகள் மற்றும் நலன்புரி அறக்கட்டளை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய மற்றும் செங்கல்பட்டு நகராட்சி இணைந்து நடத்தும் 2024 பசுமை தீபாவளி குறித்து விழிப்புணர்வு நடந்தது. இதில், செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு கழிவு மேலாண்மை கூட்டமைப்பின் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், காற்று மாசு 125 டெசிமலுக்கு மேல் ஒளி மாசு உண்டாக்கும் பட்டாசுகளை புறக்கணிப்போம், போரிய தாது படிந்த பச்சை நிறத்தில் ஒளிரும் பட்டாசுகளை தவிர்ப்போம்; பட்டாசு கழிவுகளை தரம்பிரித்து வீடு தேடி வரும் நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைப்போம். மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திடுவோம், சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்ப்போம், பசுமை பட்டாசுகளை உபயோகித்து தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடுவோம்.

நாளைய சமூதாயத்திற்கு மாசில்லா உலகை அமைப்போம், பசுமை மரக்கன்றுகளை நடுவோம், பட்டாசுகளை தமிழக அரசு நிர்ணயித்த கால அளவான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வெடிப்போம் என மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், மாணவர்கள் இது குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், பிளாஸ்டி பை தவிர்க்க, அனைவரும் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர் திருமூர்த்தி, செங்கல்பட்டு அரசு மருத்துவர் மோகன், செங்கல்பட்டு பிஎஸ்என்எல் கோட்ட மேலாளர் ரமாமணி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

The post செங்கல்பட்டில் பசுமை தீபாவளி கொண்டாட மாணவிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: