முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்ட அணி 2ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், கலெக்டரிடம் கோப்பையை வழங்கினார்

செங்கல்பட்டு: மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அக். 4ம் தேதி முதல் நேற்று வரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, போன்ற இடங்களில் நடைபெற்றது. இப்போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். இதில், 29 தங்கப்பதக்கம், 25 வெள்ளி பதக்கம், 29 வெண்கல பதக்கம் என மொத்தம் 83 பதக்கங்கள் பெற்று மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா நேற்று‌ மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து சாதனை படைத்த வீரர்களுக்கான வெற்றி கோப்பையை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜிடம் வழங்கினார். அருகில், துணை முதல்வரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சென்ற வருடமும் மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்ட அணி 2ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், கலெக்டரிடம் கோப்பையை வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: