நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி விவசாயி பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் மருத்துவமனையில் நாய்க்கடிக்கு ஊசி போட்டுக்கொண்டு வீடு திரும்பியபோது, பேருந்து சக்கரத்தில் சிக்கி, தாய் கண் முன்னே விவசாயி தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (37). விவசாயியான இவரையும், இவரது தாய் அஞ்சாலை என்பவரையும் தெருநாய் கடித்துள்ளது.

இதில், காயமடைந்த 2 பேரும் நேற்று சிகிச்சைக்காக திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். இவர்களுக்கு, துணையாக கோபியின் மகனும், மாமியாரும் வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் 2 பேரும் நாய்க்கடி ஊசி போட்டுக்கொண்டு, மீண்டும் வீராபுரம் செல்வதற்காக திருக்கழுக்குன்றம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர்.

அப்போது, வீராபுரம் செல்லும் அரசு பேருந்து வந்தவுடன் முன்பக்க படிக்கட்டில் ஏறும்போது, தவறி விழுந்ததில் கோபி மீது பின்பக்கம் சக்கரம் ஏறி இறங்கியதில், தாய் கண் முன்னே அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கழுக்குன்றம் போலீசார், கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Related Stories: