மாமல்லபுரம் அருகே மாடு மீது ஸ்கூட்டர் மோதி துப்புரவு பணியாளர் பலி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே எருமை மாடு மீது ஸ்கூட்டர் மோதியதில் துப்புரவு பணியாளர் பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் எருமை மாடும் உயிரிழந்தது. சென்னை நூத்தஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது, மகன் மாறன். இவர், கோவிலம்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இசிஆர் மார்க்கமாக சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் அருகே வந்தபோது இசிஆர் சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்த எருமை மாடு மீது ஸ்கூட்டர் மோதியதால், நிலை தடுமாறிய மாறன் கீழே விழுந்தார்.

இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும், ஸ்கூட்டர் மோதியதில் எருமை மாடும் சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துப்புரவு பணியாளர் மாறனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்த எருமை மாட்டையும் கைப்பற்றி எருமை மாட்டின் உரிமையாளர் யார்? திடீரென எங்கிருந்து ஓடி வந்தது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். மாமல்லபுரம் அருகே ஸ்கூட்டர் எருமை மாட்டின் மீது மோதிய விபத்தில் துப்புரவு பணியாளர் மற்றும் எருமை மாடு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மாமல்லபுரம் அருகே மாடு மீது ஸ்கூட்டர் மோதி துப்புரவு பணியாளர் பலி appeared first on Dinakaran.

Related Stories: