எளிய குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி: கோவி.செழியன் பேட்டி

திருச்சி: எளிய குடும்பத்தில் பிறந்த எளியவனான என்னை உயர்கல்வி துறை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ கோவி.செழியன், உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரான பிறகு அவர் முதன்முறையாக தஞ்சைக்கு நேற்று சென்றார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவிலேயே எல்லா துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்கிற அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வறியா உழைப்பாளியாக உழைத்து வருகிறார். ஏற்கனவே உயர்கல்வியில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம், இன்னும் மேன்மையுற மேல்நிலைக்கல்வியிலும், உயர்கல்வியிலும் புதிய பாடத்திடங்களை இணைத்து உலகளாவிய கல்வி தரத்தை வழங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை முதல்வர் செய்து வருகிறார்.

எனவே புகழ்பெற்ற துறையாக விளங்கிய உயர்கல்வி துறையை இன்னும் மேம்படுத்த, அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிய குடும்பத்தில் பிறந்த எளியவனான என்னை முதல்வர் அந்த துறையில் நியமித்திருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்கிற தத்துவம் தான் திராவிட மாடலின் அடிநாதம். அந்த அடிப்படையில் புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர்கல்வியின் அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். இந்தியாவுக்கே ரோல் மாடலாக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வருக்கு நன்றி. துணை முதல்வர் வழிக்காட்டுதலின்படி என்னுடைய பணியை அமைத்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post எளிய குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி: கோவி.செழியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: