ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்தார். பின்னர், அவர் சென்னையில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில், அவர் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் தென்னமர சாலை பகுதியில் வசிக்கும் சந்திரசேகரன்(76) என்பதும், திருவண்ணாமலை மாவட்டத்தில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருமணம் ஆகாதவர். உறவினர்கள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வந்துள்ளார். சந்திரசேகரன் வீட்டிற்கு சென்று போலீசார் ஆய்வு செய்ததில், வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டருக்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் கூறியிருந்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கு திருமணம் ஆகவில்லை. வயது முதிர்வு காரணமாக சிரமப்பட்டு வருவதால் நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனது முடிவுக்கு நானே காரணம். வேறு யாரும் காரணம் இல்லை. எனது நண்பர்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை. என்னை பார்க்க உறவினர்கள் யாரும் வர மாட்டார்கள்.
நான் இறந்த பிறகு எனது உடலை பிரேத பரிசோதனை செய்து மருத்துவமனையில் இருந்து இடுகாடு சென்று புதைத்து விடவும். அதற்கான செலவுக்கு ரூ.25 ஆயிரம் வைத்துள்ளேன். நான் குடியிருக்கும் வீட்டில் சடலத்தை வைக்க விரும்பவில்லை. தயவு செய்து எனது விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
* வசித்த வீட்டை சர்ச்சுக்கு எழுதிய முதியவர்
தற்கொலை செய்த முதியவர் சந்திரசேகரன் தன்னை அடக்கம் செய்ய செலவுக்கு, அவரது செல்போன் மூலம் பணம் எடுப்பதற்கு பாஸ்வேர்ட் நம்பரை பேப்பரில் எழுதி வைத்திருந்தார். அதேபோல், தனது பென்ஷன் புத்தகத்தை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு, பென்ஷனை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அவர் வசித்து வந்த வீட்டை சர்ச்சுக்கு எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
