பொன்னேரி: மீஞ்சூர் அருகே வல்லூர் ஊராட்சி, வாலாஜா தெருவை சேர்நத முகமது அஸ்கர் என்பவரின் மகள் சவுமிய பாத்திமா (17). இவர், சென்னையில் ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தேர்வுக்காக கல்லூரி மாணவி சவுமிய பாத்திமா படித்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் 4 பேர் கஞ்சா போதையில் அத்துமீறி புகுந்தனர். கல்லூரி மாணவியை 4 போதை ஆசாமிகளும், மீன் வெட்டும் கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதனால் அவருக்கு பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது.
அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அக்கம்பக்கத்தினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய 4 பேரில் ஒருவரை மடக்கி பிடித்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மீஞ்சூ ர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்குதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, கல்லூரி மாணவியை வெட்டிவிட்டு தப்பியோடிய 3 போதை ஆசாமிகள் குறித்து தீவிரமாக விசாரித்தனர். மேலும், பிடிபட்ட போதை ஆசாமியிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் வல்லூரை சேர்ந்த ரோலக்ஸ் (எ) டில்லிபாபு (24) எனத் தெரியவந்தது. அவரிடம் தப்பியோடி 3 பேர் குறித்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். இதில், தப்பியோடிய 3 பேரும் அத்திப்பட்டு புதுநகர் ரயில்வே மேம்பாலம் அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை அப்பகுதியில் மீஞ்சூர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கு பதுங்கியிருந்த 3 போதை ஆசாமிகளையும் விரட்டி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் வல்லூரை சேர்ந்த லோகேஷ் (22), சித்திக் (19), அத்திப்பட்டை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (24) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் 4 பேரும் கஞ்சா போதையில் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கல்லூரி மாணவி சவுமிய பாத்திமா தடுத்ததாகவும், அந்த ஆத்திரத்தில் அவரை மீன் வெட்டும் கத்தியால் சரமாரி வெட்டியதாகவும் தெரியவந்தது. இதன் பின்னர் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
