இ-மெயில் மூலம் நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று காலை இ-மெயில் ஒன்று வந்தது. அதில் இன்னும் சற்று நேரத்தில் நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த போலீசார் உடனே பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர். அதன்படி தேனாம்பேட்டை போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள நடிகை திரிஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் எந்த வெடி குண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வீடுகளுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்து வந்த சம்பவம், சற்று குறைந்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: