கரூர் மாவட்டத்தில் பறக்கும்படை அதிரடி ரூ.76 லட்சம் பறிமுதல்

கரூர், ஏப். 11: கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஆகியவற்றால் இதுவரை ரூ. 76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 15ம்தேதி தமிழக சட்டமன்ற தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்ததது.

இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முறையான ஆவணங்களின்றி பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்வதை காண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நான்கு தொகுதிகளிலும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை 6 மணி வரை ரூ. 76 லட்சத்து 71 ஆயிரத்து 751 பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இந்த குழுவினர் ரூ.46 லட்சத்து 48 ஆயிரத்து 380ஐ திருப்பி செலுத்தினர். தற்போது வரை ரூ.30லட்சத்து 23 ஆயிரத்து 371 மட்டும் இருப்பில் உள்ளதாக காட்டப்பட்டுள்ளது.மேலும், இந்த குழுவினர் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 34 வழக்குகளை விடுவித்துள்ளனர். 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: