சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காட்டில் வசிப்பவர் பாரதி. இவர், அதிமுகவில் ஆரம்ப காலத்தில் இருந்து பயணித்து வருகிறார். பல்வேறு பொறுப்புகளிலும் இருந்து வந்துள்ளார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் 2026 தேர்தலில் தனக்கு சீர்காழி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிர்ச்சியில் தனது பதவியை முன்னாள் எம்எல்ஏ பாரதி ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சீர்காழி சட்டமன்ற தொகுதி 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் அறிவிப்பில், சீர்காழி தொகுதி வேட்பாளர் தேர்வின்மீது தனக்கு மிகுந்த மனவருத்தம் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்சிக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டவர்களை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய நபர்களுடன் இணைந்து பணியாற்றுவது இயலாத சூழல் என்பதால், மிகுந்த மனவருத்தத்துடன் மயிலாடுதுறை மாவட்டக் கழக அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், இருப்பினும், தான் தொடர்ந்து கழகத்திற்கும், தலைமைக்கும் விசுவாசமான தொண்டனாக செயல்படுவேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
