கே.வி.குப்பம், பிப்.13: கே.வி.குப்பம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதான மாமனார், தனது மகளின் எதிர்காலத்தை நோக்கிதான் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பெங்களூரு கூலிப்படையை சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலத்தை சேர்ந்தவர் ராகவன்(30), செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி சுவேதா(28), நர்ஸ். காதல் திருமணம் செய்தவர்கள். கடந்த 8ம் தேதி நள்ளிரவு பசுமாத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் ராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது, ராகவனின் மாமனார் அமுல்ராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ராகவனின் மனைவி சுவேதா, மாமனார் அமுல்ராஜ் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது அமுல்ராஜ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: ராகவன் பல பெண்களிடம் தொடர்பில் இருந்தார். வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். தினமும் மது குடித்துவிட்டு வந்து எனது மகளை அடித்து கொடுமைப்படுத்தினார். இதனால் நான் பலமுறை ராகவனை அழைத்து பேசியும் அவர் திருந்தவில்லை. இதனால் எனது குடும்ப நண்பரான பைனான்ஸ் தொழில் செய்து வரும் வெட்டுவாணத்தை சேர்ந்த கார்த்திக்(29) என்பவர் உதவியுடன், ராகவனை திட்டமிட்டு கொன்றேன். என் மகளின் எதிர்காலத்தை நோக்கிதான் இவ்வாறு செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அமுல்ராஜ், கார்த்திக் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கார்த்திக்கிடம் போலீசார் விசாரித்தபோது, அவர், பெங்களூருவை சேர்ந்த 5 பேர் கொண்ட கூலிப்படையை வரவழைத்து, ராகவனை கொலை செய்ததாக தெரிவித்தார். அதன்பேரில் பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற போலீசார், கூலிப்படையை சேர்ந்த 5 பேரை நேற்று காலை கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
