வேலூர், பிப்.4: வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் வாடகை வீடுகள் மற்றும் லாட்ஜ்களில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட தம்பதி உட்பட 5 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார்(40). ஏற்கனவே திருமணமான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த 31வயது பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டு சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வருகிறார். மேலும் 2வது திருமணம் செய்த பெண்ணுடன் சேர்ந்து வெளியூரில் இருந்து பெண்களை வரவழைத்து விபச்சார தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் தங்கள் பகுதியில் புதிதாக ஆட்கள் வருவதும், போவதுமாக இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் வேலூர் சத்துவாச்சாரி போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் நேற்று அங்கு விரைந்து சென்ற சத்துவாச்சாரி போலீசார் வீட்டை சோதனையிட்டபோது, அங்கு விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 3 பெண்களையும், செல்வகுமார் மற்றும் அவரது 2வது மனைவியையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், தனிப்படை போலீசார் நேற்று குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சந்தேகத்துக்குரிய விடுதிகள், வீடுகள், லாட்ஜ்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில் தனியார் லாட்ஜ் மற்றும் வீடு வாடகைக்கு எடுத்து கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் செய்து வந்த 4 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என 16 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
