வேலூர், பிப்.5: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த அத்திக்குப்பத்தை சேர்ந்தவர் தர்மன், விவசாயி. இவருக்கும் இவரது மகன் ராம்குமாருக்கும் இடையே நிலப்பிரச்னை உள்ளதாம். இதன் காரணமாக தர்மன் கடந்த 2ம்தேதி (திங்கள்) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தின்போது கலெக்டர் சுப்புலட்சுமியிடம் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென அவர், கேனில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார், பெட்ரோல் கேனை பறித்து தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர். இந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி சத்துவாச்சாரி போலீசார், விவசாயி தர்மன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
