சாயல்குடி, ஜன.29: கடலாடி அருகே கே.கரிசல்குளம் செல்லியம்மன், ராக்காச்சி, முனீஸ்வரன், விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கடலாடி அருகே கே.கரிசல்குளத்தில் உள்ள செல்லியம்மன், ராக்காச்சி, முனீஸ்வரன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழாவையொட்டி ராமேஸ்வரம், திருச்செந்தூர், அழகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு கோ பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி ஹோமத்துடன் நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை நிறைவு பெற்று சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் கொண்டு வந்து கோபுர விமான கலசம் மற்றும் விக்கிரங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிகளுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் கடலாடி, கருங்குளம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செல்லியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
- Kumbabhishekam
- செல்லியம்மன்
- சாயல்குடி
- க.கரிசல்குளம்
- ரக்சாச்சி
- முனீஸ்வரன்
- விநாயகர் கோயில்
- கடலாடி
- கும்பாபிஷேக விழா
- விநாயகர்
- ராமேஸ்வரம்
- திருச்செந்தூர்
- அழகர்கோயில்…
