சென்னை,ஜன.29: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் 30ம் தேதி காலை 10 மணி முதல் 31ம் தேதி காலை 10 மணி வரை (24 மணி நேரம்) மண்டலம்-9 (தேனாம்பேட்டை), மண்டலம்-10 (கோடம்பாக்கம்) மற்றும் மண்டலம்-13 (அடையாறு)-க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது. மண்டலம்-9 (தேனாம்பேட்டை) பகுதிகளில் சூளைமேடு, வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம் (பகுதி), நுங்கம்பாக்கம், தி.நகர் (பகுதி), கோபாலபுரம், சி.ஐ.டி காலனி, மயிலாப்பூர் (பகுதி), நந்தனம், ஆழ்வார்பேட்டை, மண்டலம்-10 (கோடம்பாக்கம்) பகுதிகளில் வடபழனி (பகுதி), மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, சி.ஐ.டி.நகர், மண்டலம்-13 (அடையாறு) பகுதிகளில் சைதாப்பேட்டை பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
