கொடைக்கானல், ஜன. 20: கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் நேற்று ஒரு காரில் பழநி மலைச்சாலை வழியாக கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மேல்பள்ளம் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பு சுவர்களை உடைத்த கொண்டு சுமார் 300 அடி பள்ளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானது. கார் விழுந்த இடத்தில் இருந்து இளைஞர்கள் அலறல் சத்தம் கேட்கவே சாலையில் பயணித்த மற்ற பயணிகள் பள்ளத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த 4 இளைஞர்களையும் மீட்டு சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
