பேரறிஞர் அண்ணா முழு உருவ சிலை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் திருவண்ணாமலையில் மறுசீரமைக்கப்பட்ட

திருவண்ணாமலை, டிச. 12: திருவண்ணாமலையில் மறு சீரமைக்கப்பட்ட அண்ணா சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு, மறுசீரமைக்கப்பட்ட அண்ணா முழு உருவ சிலையை திறந்து வைத்தார். மேலும் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அவர் அளித்த பேட்டி: கடந்த 1969ம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞரால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவுக்கு சிறுசேமிப்பு திட்ட துணைத் தலைவராகவும், பரங்கிமலை தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்த எம்ஜிஆர் தலைமை தாங்கினார். அமைச்சராக இருந்த ப.உ.ச முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த அண்ணாவின் சிலையை, ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் திறந்து வைத்தார்.

அவரது 40 ஆண்டுகால நண்பராக திகழ்ந்த எம்ஜிஆர் தலைமை வகித்துள்ளார். எனவே, மூன்று முதல்வர்கள் தொடர்புடைய சிறப்புக்குரியதாக இந்த சிலை அமைந்திருக்கிறது. வரும் 14ம் தேதி முதல்வர் திருவண்ணாமலைக்கு வருகை தருகிறார். எனவே, அதற்கு முன்பாக, அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றும் வகையில் பேரறிஞர் அண்ணா சிலையை திறந்து வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைத்தவர், இருமொழி கொள்கையை நாட்டுக்கு பறைசாற்றியவர். திராவிட இயக்கத்துக்கு மூலகர்த்தா அவர்தான். எனவே, திராவிட மாடல் ஆட்சியில் அண்ணா சிலையை மறு சீரமைப்பு செய்து திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விழாவில், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், வேளாண் துறை இயக்குநர் முருகேஷ், மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் ப.கார்த்திவேல்மாறன், எஸ்.பன்னீர்செல்வம், பிரியாவிஜயரங்கன், துரைவெங்கட், துணை மேயர் சு.ராஜாங்கம், குட்டி புகழேந்தி, எஸ்.விஜயராஜ், டிவிஎம் நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், எஸ்.கண்ணதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: