8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு @19.19 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர் @வாக்காளர்கள் எண்ணிக்கை 2.02 லட்சம் குறைந்தது திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, பிப்.24: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று வெளியிட்டார். அதில், 19.19 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கி, கடந்த 14ம் தேதி வரை நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த 21,21,902 வாக்காளர்களுக்கு கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு, திரும்பப்பெறப்பட்டன.

அதன்தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 18,69,740 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனை மனுக்கள் மற்றும் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஆதார் எண் இணைத்தல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு விண்ணப்பங்களை அளிக்க கடந்த மாதம் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது கள விசாரணை நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டார்.

அப்போது, டிஆர்ஓ ராமபிரதீபன், செய்யாறு உதவி கலெக்டர் அம்பிகாஜெயின், ஆர்டிஓ சிவா, அரசியல் கட்சி பிரதிநிதிகள் இரா.கார்த்திகேயன்(திமுக), குமரன்(அதிமுக), நியூட்டன்(விசிக), காளிங்கன்(தேமுதிக) உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 9,43,727 ஆண்கள், 9,75,277 பெண்கள் மற்றும் 155 திருநங்கைகள் உள்பட 19,19159 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஆண்கள் 26834, பெண்கள் 32956, திருநங்கைகள் 32 உள்பட 59822 புதிய வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இறந்தவர்கள் 365 பேர், இடம் பெயர்ந்தோர் 9945 பேர், இருமுறை பதிவு 93 பேர் உள்பட மொத்தம் 10,403 வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அதோடு, எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி தொடங்கும் முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 21,21,902 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 19,19195 வாக்காளர்கள் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளன. அதன்மூலம், 2.02 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றுளதா என சரிபார்க்கவும், புதியதாக பெயர் சேர்க்க திருத்தம் செய்ய தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் எனவும் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

Related Stories: