தண்டராம்பட்டு, பிப்.25: தண்டராம்பட்டு அடுத்த எடத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யபிரியா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி மனிஷ்குமார் கலந்து கொண்டு பேசுகையில், ‘மாணவர்கள் நன்கு படித்து அரசு வேலைக்கு வர வேண்டும். தீய பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது. செல்போனை படிப்பிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தண்டராம்பட்டு தாலுகாவில் அதிக குழந்தை திருமணம் நடைபெறுகிறது. அதனை தடுக்கும் விதமாக 21 வயது ஆன பிறகு திருமணம் செய்து கொள்ள உறுதி ஏற்க வேண்டும். மாணவிகள் படித்தால் தான் உங்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும்’ என்றார். முடிவில் ஆசிரியர் வடவேங்கடம் நன்றி கூறினார்.
