திருவாரூர் : திருவாரூர் அருகே லட்சக்கணக்கில் முறைகேடு செய்த புகாரில் அதிமுக கூட்டுறவு சங்கத்தலைவரை சஸ்பெண்ட் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக அதிமுகவை சேர்ந்த வெற்றிவேல் (50) மற்றும் இயக்குனர்கள் செயல்பட்டு வந்தனர். இந்த சங்க செயலாளராக பணியாற்றி வந்த ஜெயபால், கடந்த ஏப்ரல் மாதம் 30ம் பணி ஓய்வு பெற்றார்.
அவர் பணி ஓய்வு பெறுவதற்கு 24 நாட்களுக்கு முன்பாகவே அம்மாதம் 6ம் தேதி அவருக்குரிய பண பலன்களில் ₹16 லட்சத்து 53 ஆயிரத்தை எடுத்து கொள்ள சங்கத் தலைவர் வெற்றிவேல் அனுமதி அளித்தார்.இந்நிலையில் இந்த சங்கத்திற்கு செயலாளராக ரவி, கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா மூலம் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் சங்கத் தலைவர் வெற்றிவேல், அவரை ஏற்க மறுத்து அதே சங்கத்தில் அக்கவுண்டன்டாக பணியாற்றி வரும் தனசேகரன் என்பவருக்கு செயலாளர் பொறுப்பு வழங்கினார்.
மேலும் இது தொடர்பாக நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் (தலைவர்) மட்டுமே கையெழுத்திட்டு பொய்யான ஒரு தகவலை மன்னார்குடி துணை பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி அனுப்பியுள்ளார்.இந்நிலையில் சங்க பதிவேடுகளை செயலாளர் தனசேகரன் திருத்தியது தொடர்பாக முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் செயலாளராக பணியாற்றி வந்த ஜெயபால், பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே அவருக்குரிய பண பலன்களை சங்க நிதியிலிருந்து எடுத்து கொள்வதற்கு அனுமதி வழங்கியது, சங்க பதிவேடுகளை செயலர் பொறுப்பு வகிக்கும் தனசேகரன் திருத்தியது, சங்கத்தில் இருந்து பதிவேடுகளை அப்புறப்படுத்தியது, நிர்வாக குழு கூட்டத்தில் செயலராக தனசேகரன் தேர்வு செய்யப்பட்டதாக பொய்யான தகவலை துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பியது போன்ற 3காரணங்கள் சுட்டிக்காட்டி வெற்றிவேலை தலைவர் பதவியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்து இணைப்பதிவாளர் சித்ரா, நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். இந்த 3 குற்றச்சாட்டுகள் தீர்க்கப்படும் வரையில் துணைத்தலைவராக இருந்து வரும் பாலகுரு என்பவர் பொறுப்பு தலைவராக செயல்படுவார் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருவாரூர் அருகே முறைகேடு புகார் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் சஸ்பெண்ட்-இணைப்பதிவாளர் உத்தரவு appeared first on Dinakaran.
