மத மோதலை ஏற்படுத்த முயற்சி அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு

சேலம்: மத மோதலை ஏற்படுத்த முயன்றதாக அண்ணாமலை மீது சேலம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் வழக்கு தொடந்துள்ளார். சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் நேற்று, சேலம் ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அதில், `பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.

இவர் சமீபத்தில் மதுரையில் பேசும்போது, முத்துராமலிங்க தேவர், அறிஞர் அண்ணாவை பார்த்து கடவுள் பக்தி இல்லாதவர்கள், கடவுள் பக்தி இருப்பவர்களை பார்த்து தவறாக விமர்சனம் செய்தால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் என எச்சரிக்கை செய்தார், இதனால் பி.டி.ராஜனும் அண்ணாவும் ஓடி விட்டனர் எனவும் கூறியிருந்தார். ஆனால் முத்துராமலிங்க தேவர் அவ்வாறு கூறவில்லை என பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பாஜ தலைவர் அண்ணாமலை இவ்வாறு கட்டுக் கதைகளை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே அண்ணாமலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதித்துறை நடுவர் யுவராஜ், டிச.2ம்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். அன்று விசாரணை நடக்கும் என தெரிகிறது.

The post மத மோதலை ஏற்படுத்த முயற்சி அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: