உடன்குடி, பிப். 18: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சி, 1வது வார்டுக்கு உட்பட்ட சிவல்விளைபுதூர் பகுதியில் உள்ள சாலைகள் முறையான பராமரிப்பின்றி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உருக்குலைந்து கிடந்தது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்த கோரிக்கைகளை அடுத்து உடன்குடி பேரூராட்சியின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. ஆனால், உருக்குலைந்த பழைய சாலையைப் பெயர்த்தெடுத்து அதையே போட்டு புதிய சாலை தரமற்ற முறையிலும் பல்வேறு குளறுபடிகளுடன் அமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் 2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டபோதும் உரிய தொலைவுக்கு அமைக்காமல் மாற்றுப் பகுதியில் அமைத்து வருவதாகவும் புகார் தெரிவித்தனர். குறிப்பாக சாலைகள் அமைக்கப்படும் பகுதியில் உள்ள வடக்கு காலன்குடியிருப்பில் இருந்து ஜெ.ஜெ.நகர் செல்லும் இணைப்பு சாலை, மெய்யன்பிறப்பு பகுதியில் உள்ள ஒரு தெருவிலும் பாதி இடங்களில் சாலை அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பலதடவை அந்த பகுதிமக்கள் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.