தூத்துக்குடியில் தொடரும் சம்பவம் வீட்டை உடைத்து ரூ.1லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

புதுக்கோட்டை, நவ.27: தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை கிருபாஸ் நகரைச் சேர்ந்தவர் குருசாமி (54). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே குடும்பத்தோடு பெங்களூரில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 4.5 பவுன் செயின், வெள்ளி குத்துவிளக்கு, பணம் உள்ளிட்ட ரூ.1லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து குருசாமி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப் பதிந்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்.

தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பிரேமலதா(31). இவர் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த 17ம்தேதி சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 சுடிதார்கள் மற்றும் ரூ.350யை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பிரேமலதா சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories: