தூத்துக்குடி, நவ. 5: தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக கடந்த வாரம் இரு நாட்கள் இடைவிடாது கொட்டிய கனமழையால் தூத்துக்குடி மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை தாமதமின்றி அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தூத்துக்குடி தபால்தந்தி காலனி, கிருஷ்ணராஜபுரம் 2வது கிழக்கு தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. பாசிபடர்ந்து தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாகவும் மாறி வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மழை நின்று 3 நாட்களாகிவிட்ட நிலையிலும் தண்ணீர் வெளியேற்றப்படாததால், வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத சூழல் உள்ளது.