ஏரல், அக். 31: ஏரல் பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த போதிலும் ஏரல் பகுதிகளில் திடீரென மழை பெய்யும். அதன்பின் மழை பெய்த இடமே தெரியாத அளவிற்கு வெயில் கொளுத்தும். இப்படி இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய மழை கொளுத்தியது. அதன் பின் விட்டு, விட்டு பகலில் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப், மற்றும் பஜார் பகுதி நுழைவு வாயில், ஏரல் பஸ் நிலையம் மற்றும் அப்பகுதியில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதிகளில் முட்டளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ரோட்டில் சாக்கடை கான் தண்ணீர் நிறைந்து மழை தண்ணீருடன் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள டீ கடைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகதியில் உள்ள வியாபாரிகள் தண்ணீரை வடியவைத்தனர்.