கோவில்பட்டி, அக். 15: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் சமேத பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தென் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றாகவும், திருப்பூவனம், திருமங்கை நகர், திருக்களாவனம், திருப்புனன்மலை, பொன்மலை, கோவிற்புரி என்றெல்லாம் வரலாற்றில் இடம்பெற்றதுமான கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் சமேத பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை, திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் பக்தர்களின் சரண கோஷத்திற்கு இடையே கொடியேற்றி, 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் செண்பகவல்லி அம்மன் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் திருப்பதி ராஜா மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர் தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் ஐப்பசி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை, மாலை சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளியதும் வீதியுலா நடைபெறும். விழாவின் சிகரமான தேரோட்டம் வரும்22ம் தேதியும், 25ம் தேதி ஐப்பசி திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். உடன்குடி: இதே போல் பழமையும், புராதன பெருமையுமிக்க குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நேற்று அதிகாலை 5மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.