நாசரேத், அக். 1: தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் உள்ள மிஷனெரிகளை நினைவு கூறும் பவனி நடந்தது. தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல 16வது ஸ்தோத்திரப் பண்டிகையை முன்னிட்டு மிஷனெரிகளை நினைவு கூறும் பவனி நேற்று நடந்தது. தூத்துக்குடி பன்னீர்குளத்தில் இருந்து பவனி புறப்பட்டு ஜெய்லானி தெரு, டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயம், சாயர்புரம், பண்ணைவிளை, மூக்குப்பீறி, நாசரேத், சாத்தான்குளம், நல்லம்மாள்புரம், பெத்லகேம், போலையர்புரம், முதலூர், கடாட்சபுரம், மெஞ்ஞானபுரம், வெள்ளாளன்விளை, கிறிஸ்டியாநகரத்தில் முடிவடைந்தது.தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் பவனியை ஜெபித்து தொடங்கி வைத்தார். நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் மர்காஷிஸ் ஐயர், தாமஸ் பிரதர்ட்டன், அனிபிரதர்ட்டன், அனிகேமர் ஆகிய 4 மிஷனெரி கல்லறைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன. நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் மர்காஷிஸ் ஐயர் கல்லறைக்கு திருமண்டல பேராயர் தேவசகாயம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருமண்டலத்தில் உள்ள மொத்தம் 35 மிஷனெரி கல்லறைகளுக்கு மாலைஅணிவிக்கப்பட்டன.