உடன்குடி, செப். 15: நீதிமன்ற தீர்ப்பின்படி சட்டத்திற்குட்பட்டு அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படும் என்று பாஜ தேசிய செயலாளர் இல.கணேசன் தெரிவித்தார். மத்திய பாஜ அரசு அமல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மக்களிடம் எவ்வாறு எடுத்து செல்வது, பாஜ நிர்வாகிகள் மக்களுடனும், அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம், உடன்குடி பாஜ அலுவலகத்தில் நடந்தது. பாஜ மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன் தலைமை வகித்தார். உடன்குடி ஒன்றிய தலைவர் திருநாகரன், நகர தலைவர் ஜெயக்குமார், மாவட்ட நுண்பிரிவு தலைவர் செல்வகணபதி, ஒன்றிய அமைப்பு செயலாளர் அழகேசன், பொதுச்செயலாளர் சிவந்திவேல், மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் இல.கணேசன் பங்கேற்று பேசும்போது, பாஜ அரசு முத்தலாக் தடை, 370வது பிரிவு நீக்கம் என பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் அமைக்கப்படும்.