ஆறுமுகநேரி, ஏப்.25: ஆறுமுகநேரி அருகே பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றி வந்த டிரைவர் திடீரென நெஞ்சுவலியால் துடித்து இறந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சுவரில் மோதியது. குழந்தைகள் 6 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இருந்து அடைக்கலாபுரம் செல்லும் சாலையில் முத்துகார்டன் உள்ளது. இங்கு பெர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தில் இருந்து மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் இப்பள்ளியில் படிக்கின்றனர். மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு பள்ளி நிர்வாகத்தினரால் பேருந்து வசதி உள்ளது. நேற்று காலை 10 மணிக்கு ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில் உள்ள குழந்தைகளை பள்ளி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு டிரைவர் மோகன்ராஜ் (45) என்பவர் வந்துக்கொண்டிருந்தார். 21 குழந்தைகளும், 3 ஆசிரியர்களும் இருந்தனர். ஆறுமுகநேரி அடுத்த காமராஜர்புரத்தில் இரண்டு பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சுமார் 100 மீட்டர் தூரம் செல்லும் போது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வாகனத்தை தொடர்ந்து இயக்க முடியாமல் டிரைவர் சீட்டில் சாய்ந்து விழுந்தார். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து செல்வராஜ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளி மரத்தில் மோதி நின்றது.