தூத்துக்குடியில் நாளை திமுக, கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி, மார்ச் 22: தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி திமுக, கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நாளை (23ம் தேதி) முதல் நடக்கிறது. இதுகுறித்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வசந்தம்  ஜெயக்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தி, வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன்படி நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம், தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடக்கிறது. 24ம் தேதி காலை 10 மணிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்,விளாத்திகுளம் சோலை மஹாலிலும், 27ம் தேதி காலை 10 மணிக்கு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்திலும் நடக்கிறது. இதில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Related Stories: