விளாத்திகுளம், பிப். 22: விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலர் முத்துலட்சுமி அறிவுறுத்தலின்படி நடந்த இப்பேரணியில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சரளாதேவி தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கணக்கான அங்கன்வாடி பணியாளர்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்களும் பங்கேற்றனர். பழைய தாலுகா அலுவலகம் முன் தொடங்கிய இப்பேரணி விளாத்திகுளம் பஸ் நிலையம், ஒன்றிய தொடக்கப்பள்ளி, காய்கறி மார்க்கெட் வழியாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு மைய அலுவலக்தில் நிறைவடைந்தது. பேரணியில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள், வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.