ஓட்டப்பிடாரம், பிப். 22: எப்போதும்வென்றான் அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் கிராமசாலை உருக்குலைந்துள்ளது. இதனிடையே நபார்டு வங்கி உதவியில் மேற்கொள்ளப்படும் கிராமச்சாலையை தரத்துடன் அமைக்க வேண்டும் என வெ.தளவாய்புரம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஓட்டபிடாரம் தாலுகா, எப்போதும்வென்றானில் இருந்து எட்டையபுரம் தாலுகா கண்ணக்கட்டை பஞ்சாயத்து வெ.தளவாய்புரத்திற்கு செல்லும் 2.5 கி.மீ சாலை அதிகாரிகளின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பின்றியும் முற்றிலும் உருக்குலைந்தது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே நபார்ட் வங்கி திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சத்தில் சீர்செய்யும் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன் துவங்கியது. இருப்பினும் தார் விரிக்காத நிலையில் அந்த ரோடானது தற்போது சிதிலமடைந்து விட்டது.