தூத்துக்குடி, ஜன. 10: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் 8 பேருக்கு வருவாய்த் துறையில் பணி நியமன ஆணையை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றிய 8பேர் பணியின் போது இறந்தனர். இதையடுத்து அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர்களது தகுதிக்கேற்ப வருவாய்த் துறையில் இளநிலை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன உத்தரவுகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். மேலும், இந்தியா ஸ்பீடு ஸ்கேட்டிங் அஸ்ஸோசியேஷன் சார்பாக கடந்த மாதம் நாக்பூரில் நடத்தப்பட்ட சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றிபெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 முதல் 16 வயதுக்கு மேற்பட்ட 9 ஸ்கேட்டிங் வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.