தூத்துக்குடி, ஜன. 4: தூத்துக்குடியில் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்த வணிகர்கள், அதிகாரிகளையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தூத்துக்குடியில் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் சுமார் 800 கிலோவுக்கும் மேற்பட்ட எடையிலான பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதனிடையே நேற்று காலை தூத்துக்குடி- பாளை ரோட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களுடன் பேப்பர் கப்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்தனர். தகவலறிந்ததும் தூத்துக்குடி நகர பகுதி வர்த்தகர்கள் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் திரண்டு வந்தனர். மேலும் சூப்பர் மார்க்கெட்டில் பணியில் இருந்த மாநகராட்சி வாகனத்தை சிறைப்பிடித்ததோடு மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். குறிப்பாக பேப்பர் கப்களை எதற்கு பறிமுதல் செய்யவேண்டும் என்று கடுமையாக வாதிட்டனர்.