ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை

தர்மபுரி: தர்மபுரி அருகே ஸ்கேட்டிங் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்த பயிற்சியாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் பொத்திகல் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் அவரது 12 வயது தங்கை ஆகியோர், முறையே 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். பெற்றோர் பிரிந்து விட்ட நிலையில், இருவரும் தங்களது தாத்தா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தனர். அப்போது, கணவாய்புதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்கேட்டிங் பயிற்சியாளரான சதீஷ்குமார் (27) என்பவருடன் 13 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, தனது தங்கையுடன் சிறுமி ஸ்கேட்டிங் பயிற்சிக்கு சென்று வந்தார்.

தினசரி சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் இருவரையும் அழைத்துச்சென்று, பொம்மிடியில் உள்ள களத்தில் பயிற்சி அளித்து வந்துள்ளார். அப்போது, 13 வயது சிறுமியுடன் சதீஷ்குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பயிற்சியில் நன்கு தேர்ச்சி அடைந்த சிறுமி, மாநில அளவிலான போட்டியில் வெற்றி ெபற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக, ஒன்றரை மாதத்திற்கு முன்பு, சிறுமியை நாக்பூருக்கு சதீஷ்குமார் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காதலிப்பதாக கூறி, ஓடும் ரயிலில் வைத்து சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார்.

நாக்பூர் சென்றதும், ஓட்டலில் தங்கியிருந்தபோது ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்து, ஓட்டலில் தங்க வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து ஓசூரில் தங்கி பணியாற்றி வரும் சிவில் இன்ஜினியரான தனது தந்தையிடம், நேற்று முன்தினம் சிறுமி தெரிவித்துள்ளார். அதனைக்கேட்டு அதிர்ச்சிக்குள்ளான அவர், பொம்மிடி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து சதீஷ்குமாரை தேடி வருகின்றனர். ஸ்கேட்டிங் பயிற்சியாளரால் சிறுமி சிதைக்கப்பட்ட சம்பவம் பொம்மிடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: