துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் பயணிகள் விமானம் நேற்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலா விசாவில், துபாய்க்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

இதையடுத்து அவருடைய உடைமைகளை முழுமையாக பரிசோதித்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராத ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், அந்த பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆடைகளை கலைந்து பரிசோதித்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலை எடுத்துப் பிரித்து பார்த்தபோது, அதில் 700 கிராம், 24 கேரட் சுத்தமான தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கப் பசையை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கடத்தல் குருவி என்று தெரியவந்தது. எனவே இவரை கடத்தலுக்கு அனுப்பி வைத்த நபர் யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: