கிணத்துக்கடவு: கணவன் கொலை வழக்கில் திருப்பமாக மனைவி போலீசில் சரணடைந்தார். சித்தப்பா-மகள் உறவு எனக்கூறி கள்ளக்காதலில் ஈடுபட்டு, கணவரை கொலை செய்து விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம், அரசமர விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரத்தீஷ் (32). இவரது மனைவி இந்திராணி. இவருக்கும், இவரது உறவினரான கரூரை சேர்ந்த தனியார் பார் மேனேஜர் வினோத் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த கணவர் ரத்தீஷ் மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திராணி தனது கள்ளக்காதலன் வினோத்துடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 27ம் தேதி கரூரில் இருந்து நண்பருடன் வினோத் கோவைக்கு வந்தார். தாமரைக்குளத்துக்கு சென்ற அவர்கள் நள்ளிரவில் ரத்தீஷை தாக்கி கொலை செய்தனர். உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டு ரயிலில் அடிபட்டு இறந்ததாக காட்ட நினைத்தனர். இதற்காக ரத்தீஷின் உடலை கரூருக்கு கொண்டு சென்று ரயில் தண்டவாளத்தில் போட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் அடையாளம் தெரியாத சடலம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிணத்துக்கடவு போலீசில் இந்திராணி சரணடைந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக கூறினார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வினோத்துக்கு அவரது மனைவியின் தங்கை முறையான இந்திராணி கொழுந்தியாள் ஆவார். இந்திராணி வீட்டிற்கு, வினோத் அடிக்கடி வந்து செல்வது மற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பேச்சை தவிர்க்க இருவரும் சித்தப்பா, மகள் என்று உறவு முறையை கூறி கள்ள உறவில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் வினோத்தை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் எங்கு பதுங்கியுள்ளார்? என போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் கரூருக்கு சென்று பதுங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதால் அவர்கள் கரூர் விரைந்துள்ளனர்.
