தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போனில் பேசிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமரியாதை செய்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் அருகேயுள்ள பொம்மைக்குட்டைமேட்டில் கடந்த 28ம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் விழா நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது மேடையின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் ஆயுதப்படை எஸ்எஸ்ஐ சிவப்பிரகாசம் (47) எழுந்து நிற்காமல் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து, தேசிய கீதத்தை அவமரியாதை செய்த எஸ்எஸ்ஐ சிவபிரகாசத்தை, மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டுள்ளார். சிவபிரகாசம் வேலூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தார். அங்கு அவர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஆயுதப்படைக்கு மாற்றினார். தற்போது தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: