கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி:  கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் சாலைகள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது. தற்போது, பனிக்காலம் என்பதால் வனப்பகுதிகளில் உள்ள தாவரங்கள் காய்ந்து கிடக்கும் சூழலில் மலைப்பகுதிகளில் உள்ள சிறு, சிறு அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி காட்டு யானைகள் சாலைகளில் உலா வருகிறது.

மேலும், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை அருகே காட்டு யானை ஒன்று சாலையில் உலா வந்துள்ளது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மலைப்பாதையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.  நீண்ட நேரம் சாலையில் உலா வந்த காட்டு யானை அங்கும், இங்குமாக சென்று பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் அச்சத்துடன் வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கி சென்றனர்.

 எனவே, இதுபோன்று பகல் நேரங்களில் சாலைகளில் உலா வரும் காட்டு யானையை வனத்துறையினர் வாகன ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: