சென்னை:அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பாஜவை பற்றி விமர்சித்து பேசினார். இது தமிழக பாஜவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக மூத்த தலைவர் பொன்னையனின் கருத்து எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்திருக்கிறது. பாஜ 4 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை, சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவாக இருந்தாலும் சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி கட்சி தலைவர் அண்ணாமலை மிக தெளிவாக பேசி வருகிறார். காவிரி பிரச்னையில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசுக்கு எதிராகவும் அண்ணாமலை கருத்து கூறியது பொன்னையனுக்கு நினைவில்லையா.