டாப்சிலிப் வனப்பகுதியில் காலில் காயத்துடன் மீட்கப்பட்ட யானை சாவு

ஆனைமலை: டாப்சிலிப் வனப்பகுதியில் காலில் காயத்துடன் மீட்கப்பட்டு கோழிகமுத்தி முகாமில் கூண்டில் அடைக்கப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் வனப்பகுதியில் கடந்த 27ம் தேதி கால் மற்றும் உடலில் காயத்துடன் உணவின்றி தவித்து வந்த 5 வயது பெண் காட்டு யானையை, வனத்துறையினர் மீட்டனர். இதைத்தொடர்ந்து கும்கி யானைகள் உதவியோடு மீட்கப்பட்ட யானையை கோழிகமுத்தி முகாமில், பிரத்யேக கூண்டு அமைத்து அதில் அடைத்தனர். மேலும், வன கால்நடை மருத்துவ குழு சார்பில் யானைக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ குழு கண்காணிப்பில் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த யானை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவ குழு சார்பில் இறந்த யானைக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டது. உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. முழு ஆய்வுக்கு பிறகு யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: