சென்னை: அரசியல் கட்சிகளுக்கு தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்பு நேரத்தை ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்பு நேரத்தை ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் தகவல் தொழில்நுட்பத் தளம் வழியாக மின்னணு காலச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒளிபரப்பு, ஒலிபரப்பு காலமானது, ஒவ்வொரு கட்டத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து, அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை திட்டமிடப்படும். இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கட்சிக்கும் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகிய இரண்டிலும் தலா 45 நிமிடங்கள் அடிப்படை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்திற்குள்ளான மண்டல நெட்வொர்க்கில் சீராக வழங்கப்படும். அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முந்தைய சட்டப் பேரவை தேர்தல்களில் கட்சிகளின் தேர்தல் செயல்பாட்டின் அடிப்படையில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்சி ஒளிபரப்புகளுடன் கூடுதலாக, பிரசார் பாரதி கார்ப்பரேஷன் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் இரண்டு குழு விவாதங்கள் மற்றும் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யும்.
தகுதியுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பிரதிநிதியை பரிந்துரைக்கலாம், இது அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பாளரால் வழிநடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
