பாட்னா: கட்சியில் தனது பலத்தை காட்ட தந்தையின் பிறந்தநாளான வரும் 5ம் தேதி அவரது சொந்த தொகுதியான ஹாஜிபூரில் இருந்து சிராக் பஸ்வான் ‘ஆசிர்வாத பாதயாத்திரையை’ தொடங்குவதாக அறிவித்துள்ளார். பீகாரில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. பஸ்வானின் மகனும் எம்பியுமான சிராக் பஸ்வான் கட்சியை வழிநடத்தி வந்த நிலையில், அவரது சித்தப்பா பசுபதி பராஸ் தலைமையில் 5 அதிருப்தி எம்பிக்கள் கோஷ்டி சேர்ந்தனர். நாடாளுமன்ற கட்சி தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வானை நீக்கி பசுபதி அந்த பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும், அவர் லோக் ஜனசக்தி கட்சி தேசிய தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், தனித்து விடப்பட்டுள்ள சிராக் பஸ்வான் கட்சியில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலில் உள்ளார்.