சிக்கபள்ளாபுரா: சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் இயங்கி வரும் குவாரிகளில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 90 சதவீதம் குவாரிகள் உள்ளதாக மேலவை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் குற்றம்சாட்டினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, சிக்கபள்ளாபுராவில் சமீபத்தில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இன்னும் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த குவாரி உரிமையாளர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. மாவட்டத்தில் 174 குவாரிகள் உள்ளது.
இதில் 111 குவாரிகள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது. இதில் பலர் அனுமதி பெறாமல் குவாரி நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குவாரிகள் முறைப்படுத்த வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கி வரும் குவாரிகளை தடை செய்ய வேண்டும், வெடி விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. இருப்பினும் நமது நாட்டில் எண்ணை நிறுவனங்கள் தினமும் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியில் நலிந்துள்ள மக்கள், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் சாமானிய ஏழை, நடுத்தர வர்க்கதினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் ‘’ என்றார்.