தூய்மை பணியாளர் மீது தாக்குதல் பெயின்டர் கைது

அம்பத்தூர்: ராயபுரம், ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் சசிகலா (50). அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக உள்ளார். இவர், நேற்று அம்பத்தூர்- வானகரம் சாலை அத்திப்பட்டு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டபோது, குப்பையை கொண்டு வந்த ஒருவர், அதனை தொட்டியில் போடாமல், சாலையில் வீசினார்.

இதை சசிகலா கண்டித்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர், சசிகலாவை அடித்து கீழே தள்ளி உள்ளார்.

அதில், அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த சக ஊழியர்கள், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அத்திப்பட்டு சின்ன காலனி வஉசி தெருவை சேர்ந்த பெயின்டர் ஆறுமுகம் (40) என்பவர், சசிகலாவை தாக்கியது தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்தனர்.

Related Stories: