திருமங்கலம்/மேலூர்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கியிருந்த வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 132 பேர் நேற்று இரண்டாம் கட்டமாக சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் மேலூரிலிருந்தும் 183 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுதலினால் போடப்பட்ட ஊரடங்கினால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததையொட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லத்துவங்கினர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் முதற்கட்டமாக 98 வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி சென்றனர். இந்தநிலையில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் கட்டிட பணிகளை செய்து வந்த 132 பீகார், மத்தியபிரதேசத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் இரண்டாம் கட்டமாக நேற்று திருமங்கலத்திலிருந்து அவர்களது மாநிலத்திற்கு கிளம்பினர். திருமங்கலம் தாலுகா அலுவலகத்திலிருந்து 6 பஸ்களில் இந்த வடமாநில தொழிலாளர்கள் மதுரை ரயில்வே ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஏற்பாடுகளை ஆர்டிஓ சவுந்தர்யா, தாசில்தார் தனலட்சுமி செய்தனர்.