ஸ்ரீவைகுண்டம்: ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் முதுமக்கள் தாழிகள் சேதமடைந்ததால் இயந்திரங்களை பயன்படுத்தி குழி தோண்ட தடை விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வேலி அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணி நேற்று நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை வரையுள்ள தாமிரபரணிக்கரைகளில் அகழாய்வு செய்ய தமிழக தொல்லியல் துறையினர் முடிவு செய்தனர். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த 31ம் தேதி 10 பேர் கொண்ட தமிழக தொல்லியல் துறை குழுவினர் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தினை தேர்வு செய்தனர். அந்த இடத்தை சுற்றி ஏற்கனவே கம்பி வேலிகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. இப்பணிக்காக விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு குழி தோண்டியுள்ளனர். அதில் சுமார் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தன.