இஸ்லாமாபாத்: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு மசூத் அசார் தலைமையில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை தடுத்து வருகிறது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார்.