தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று மட்டும் காவலன் எஸ்ஓஎஸ் செயலி மூலம் 12,421 புகார் அழைப்புகள்: போலீஸ் உயரதிகாரிகள் தகவல்

வேலூர்:  தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று மட்டும் காவலன் எஸ்ஓஎஸ் செல்போன் செயலி மூலம் 12,421 புகார் அழைப்புகள் வந்துள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக காவல்துறை சார்பில் காவலன் எஸ்ஓஎஸ் என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை இளம்பெண்கள், முதியவர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம். சிக்கலான நேரங்களில் இந்த செயலியை தொட்டாலோ, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சம்பந்தப்பட்டவர்கள் இடர்பாட்டில் சிக்கியிருப்பதை அறிந்துகொள்ளும் விதமாக எஸ்எம்எஸ் சென்றுவிடுகிறது.  அதோடு, சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக ஆபத்தில் சிக்கிய பெண்கள் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு காப்பாற்ற முடியும். இதனால்  இளம்பெண்கள், முதியவர்கள் மத்தியில் இந்த ஆப்ஸ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையின் போது மட்டும் கடந்த 6ம் தேதி காலை 6 மணி முதல் 7ம் தேதி காலை 6 மணி வரை காவலன் எஸ்ஓஎஸ் செயலி மூலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், முதியவர்கள் என்று மொத்தம் 12,421 பேர் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். இதில் 4,346 அழைப்புகள் உண்மையாக பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. 4,167 பேருக்கு உடனடியாக போலீசார் உதவி செய்து தீர்வு கண்டனர். மற்றவர்களின் பிரச்னைகள் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.  சென்னையில் மட்டும் 2,004 புகார் அழைப்புகளும், மதுரையில் 180 அழைப்புகள், கோவையில் 126 அழைப்புகள், திருச்சி 111 அழைப்புகள், வேலூர் 96 அழைப்புகள், கடலூர் 96 அழைப்புகள் உட்பட மொத்தம் 12,421 புகார் அழைப்புகள் காவலன் எஸ்ஓஎஸ் செயலி மூலம் வந்துள்ளன.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘இளம்பெண்கள், முதியவர்கள் மத்தியில் காவலன் எஸ்ஓஎஸ் செயலி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பெறப்படும் புகார்கள் மாஸ்டர் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. டிஜிபியும் நேரடியாக கண்காணிப்பதால், புகார் பெறப்பட்ட உடனே நடவடிக்கை எடுக்காதவர்களுக்கு மெமோவும் வழங்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக காவலன் எஸ்ஓஎஸ் ஆப்ஸ் உள்ளது. அத்துடன் மாவட்டந்தோறும் போலீசார் இந்த ஆப்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: